இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்குத் தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
மும்பையில் வெள்ளிக்கிழமை ஆா்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பிறகு பேசிய சஞ்சய் மல்ஹோத்ரா, ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்கு 85 சதவீத மதிப்பில் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என இருந்த விதி தளர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பொதுத்துறை வங்கிகள் மட்டுமே நகை மதிப்பில் 75 சதவீதம் கடன் என்பதை முறையாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிய சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறிய வங்கிகள் தங்க நகையின் மதிப்பில் 88 சதவீதம் அளவுக்குக் கடன் வழங்குவதாகவும் கூறினார்.
அண்மையில் நகைக்கடன் தொடர்பான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய வரைவு விதிமுறைகளை வெளியிட்ட ஆா்பிஐ, மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் அந்த முடிவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.