கடலூர் அருகே அதிகாரிகளின் மெத்தன போக்கால் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைத்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காரணப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல் மணிகளை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் 20 நாட்களுக்கும் மேலாக நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் மெத்தனத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நெல்மணிகள் நனைந்து முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.