இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆர்ஸிம் 4 திட்டத்தின் கீழ் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணிக்கவுள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காகத் தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்க உள்ளார்.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸிம் 4 திட்டத்தின் கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சுக்லாவுடன் போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்க இருக்கின்றனர்.
இவர்கள் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்படும் டிராகன் விண்கலத்தில் பயணிக்கவுள்ளனர்.
அதன்படி நாளை புறப்படும் இந்த குழு, சுமார் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடையவுள்ளது.
அங்கு சுக்லா 14 நாள்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.