நாட்டின் வலிமைமிக்க பிரதமராகக் கடந்த ஜூன் 9ம் தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், இந்தியா அனைத்து துறைகளிலும், அபரிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014ம் ஆண்டுக்கு முன் வரை, இந்த நாட்டில் எதுவுமே நடக்காது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. விரக்தியில் இருந்த மக்கள், தங்களின் கடைசி நம்பிக்கையாகப் பிரதமர் மோடியைத் தேசத்தை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தனர். முன்னேற்றத்தின் சகாப்தம் தொடங்கியது.
நாட்டை விரக்தியின் ஆழத்திலிருந்து மீட்டெடுத்து, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நாட்டின் மீதான தன்னம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டது. மோடி 3.0- இந்த முறை தனது அரசு, மூன்று மடங்கு வேகமாகச் செயல்படும் என்றும், முதல் பதவிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாக நன்மைகள் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
சொன்னது போலவே, தீர்க்கமான தொலைநோக்கு பார்வை,உறுதியான கொள்கை முடிவு, உலகளாவிய அந்தஸ்தில் அசைக்க முடியாத உயர்வு என ஓராண்டுக்குள் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை நாடு அடைந்திருக்கிறது.
குறிப்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் மோடி 3.0 வின் மிகப் பெரிய சாதனையாகும். சந்தேகத்துக்கு இடமின்றி தேசிய பாதுகாப்பில் ஒரு துணிச்சலான முன்னேற்றம் இதுவாகும். இராணுவ மற்றும் இராணுவமற்ற நடவடிக்கையான ஆப்ரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை உலகத்துக்குப் பறை சாற்றியது.
அதிரடி தாக்குதல்களைத் தாங்க முடியாத பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிமாக நிறுத்து வைக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப் பட்டது. இனி எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும் என்று இந்தியா எச்சரித்தது.
11 ஆண்டுகளுக்கு முன் 686 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி, இந்த ஆண்டு 23,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகள், இப்போது இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தைத் தங்கள் ஆதாரமாக அமைத்துக் கொண்டுள்ளன. பிரதமர் மோடி, இந்தியாவுக்கு மட்டும் பாதுகாவலாக இல்லாமல், உலகத்துக்கே பாதுகாவலாக உள்ளார் என்பதையே இது காட்டுகிறது.
2026 மார்ச் மாதத்துக்குள், . “நக்சல் இல்லாத இந்தியா” வை உருவாக்கும் இலக்கை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாடு முழுதும் நக்சலைட் பயங்கரவாதத்தை ஒழிக்கும் ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ என்ற நடவடிக்கை நடத்தப்பட்டது.
நக்சல் அமைப்புகளுக்குத் தலைமையகமாக விளங்கிய சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டலு மலையில் வெறும் 21 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் ராணுவ நடவடிக்கையில், எந்த ஒரு பாதுகாப்பு வீரரின் உயிருக்கும் ஆபத்தில்லாமல், 50க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஒரு காலத்தில் சிவப்பு பயங்கரவாதத்தால் ஆளப்பட்ட கர்ரேகுத்தலு மலையில், மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
முன்னணி சர்வதேச சக்தியாகவும் “உலகளாவிய தெற்கின் குரல்” என்ற இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தி வருகிறது. இன்னொருபுறம்,பொருளாதாரத்திலும் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 11-வது இடத்திலிருந்த இந்தியா, 4 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளன.
2011-12 ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த வறுமை தற்போது ஐந்து சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகக் கிராமப் புறங்களில் வறுமை 7.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. சொல்லப்போனால் 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக, 12 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக அறிமுகப்படுத்தப் பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்குகிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், 25 ஆண்டுகள் சேவை செய்த அரசு ஊழியர்களுக்குச் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீத ஓய்வூதியத்தை உறுதி செய்துள்ளது.
பெண்களின் கண்ணியத்தை உறுதி செய்த தூய்மை இந்தியா திட்டம்,பெண்களுக்கு நிதி அதிகாரம் அளித்த ஜன் தன் திட்டம், பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றிய முத்ரா திட்டம், பெண்களின் பெயரில் வீடு வழங்கும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டம், பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் புகையில்லா சமையலறையை வழங்கிய உஜ்வாலா திட்டம் எனப் பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு நலத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு நாட்டில் உள்கட்டமைப்புக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 மடங்கு வளர்ச்சியைத் தருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட சாலை, ரயில்வே மற்றும் விமான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 1,50,000 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஜெர்மனிக்கு இணையான ரயில்வே நெட்வொர்க் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் 157க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உலகத் தரத்தில் உருவாக்கப் பட்டுள்ளன.
(Wadwan port) வாட்வான் துறைமுகம் முதல் போலவரம் திட்டம் வரை, உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தின் பொறியியல் அற்புதம் முதல் எல்லை இணைப்பை மேம்படுத்தும் (Z-Morh )இசட்-மோர் சுரங்கப்பாதை வரை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு புரட்சி வெறும் கட்டுமான முயற்சிகள் அல்ல, தேசத்தைக் கட்டியெழுப்பிய மைல்கற்கள்.
இது எல்லாம் இந்தியாவில் சாத்தியமா ? என்று ஆச்சரியப் பட வைக்கும் பல முக்கியமான மசோதாக்களைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது. புறக்கணிக்கப் பட்ட முஸ்லிம் பெண்களுக்கு நில உரிமைகள் மற்றும் கண்ணியத்தைக் காப்பாற்றக் கொண்டுவரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம், நாட்டில் இருந்த பல ஆண்டுக்கால அநீதியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தைரியமாகப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்குப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
உறுதியான, கூர்மையான, லட்சியத்தில் தடுக்க முடியாத மோடி 3.0, நிர்வாக விதிகளைக் கச்சிதமாக எழுதுகிறது; தேசியப் பாதுகாப்பை மறுவரையறை செய்கிறது; துணிச்சலான சீர்திருத்தங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேசிய வாதத்துடன் பாரத பாரம்பரியத்தை மீட்டெடுக்கிறது; இந்தியாவின் உன்னதமான எதிர்காலத்தைப் படைக்கிறது.