ரஷ்யா தனது ஐந்தாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான சுகோய் Su-57 ஐ இந்தியாவில் தயாரிக்க முன்வந்துள்ளது. பாதுகாப்பு உற்பத்தியில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
புவிசார் அரசியலில் மாற்றங்கள் வேகமாக நடந்துவருகிறது. ஒருபுறம் பாகிஸ்தான் மறுபுறம் சீனா என இந்திய எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா தனது இராணுவப் பலத்தை அதிகரித்து வருகிறது. மேலும் அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரித்தும் வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா, தனது சுகோய் Su-57 என்னும் 5ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தை இந்தியாவுடன் கையெழுத்திடுகிறது. ஏற்கெனவே, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை வலிமைப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவின் சுகோய் போர் விமானத்தை வாங்க இந்தியா தயங்கியது.
2007ம் ஆண்டில், இந்தியாவும் ரஷ்யாவும் ஆரம்பத்தில் Su-57 வகையில் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இணைந்து உருவாக்க முடிவு செய்தன. இதற்கான முறையான ஒப்பந்தம் 2010ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.
எதிர்பாராத வகையில், 2014ம் ஆண்டில், இந்த விமானத்தின் செயல் திறன் குறித்த கேள்விகளால் 2018ம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. ஆனால் இந்தமுறை, ரஷ்யா Su-57E-ஐ Super-30 என்று களமிறக்கியுள்ளது. Su-57E மேம்படுத்தப்பட்ட ஒரு இந்திய Su-30MKI சூப்பர்-30 தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாகும். இதில் இந்திய GaN AESA ரேடார் மற்றும் மிஷன் கணினி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
முழுமையான சுகோய் Su-57E, ஒருங்கிணைப்பு திறன்களை அதிகரிக்கிறது. பயன்பாட்டை எளிதாக்குகிறது. அஸ்ட்ரா போன்ற இந்திய ஆயுதங்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது மற்றும் “மேக் இன் இந்தியா”வை ஆதரிக்கிறது.
Su -57E ஸ்டீல்த் ஜெட் என்பது ரஷ்யாவின் சுகோய் Su-57 வகையாகும். இது ஏற்றுமதிக்கான போர் விமானம் ஆகும். இது ரஷ்யாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மல்டிரோல் ஸ்டெல்த் போர் விமானமாகும். ஐந்தாம் தலைமுறை போர் விமானமான இது, ஸ்டெல்த், சூப்பர் குரூஸ், சூப்பர் சூழ்ச்சித்திறன், மேம்பட்ட ஒருங்கிணைந்த ஏவியோனிக்ஸ் என மேம்பட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் தயாரித்திருக்கும் Su-57E போர் விமானம் இரட்டை எஞ்சின்கள் கொண்டது, ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட விமானமாக இருக்கிறது. வானிலிருந்து வானில் இருக்கும் மற்றொரு இலக்கையும், வானிலிருந்து தரையில் இருக்கும் இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது.
அதிகபட்சமாக 54,100 அடி உயரத்தில் இயங்கக்கூடியது. மணிக்கு 1350 கிலோமீட்டர் (Mach 1.8) வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 3000 கிலோமீட்டர் சென்று தாக்கக் கூடியது. அதிநவீன தொழில்நுட்பங்களோடு அனைத்து வகையான காலநிலைகளிலும் பயன்படுத்தும் திறன் கொண்டது.
ஏற்கெனவே, ரஷ்யாவின் Su-30 MKI விமானங்கள், இந்தியாவில் நாசிக்கில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் படுகிறது. சுகோய் Su-57M போர் விமானத்தை முதல் முறையாக ரஷ்யா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உருவாக்கியுள்ளது. Su-57M என்பது ரஷ்யாவின் Su-57 போர் விமானத்தின் மேம்பட்ட வகையாகும். ரஷ்யாவின் இந்த சாதனையைக் கண்டு அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
எந்த அப்டேட் செய்தாலும் அதற்கேற்ப, சுகோய் ரக போர் விமானங்களில் எளிதாக மாற்றங்களைச் செய்துவிட முடியும் என்பது தான் சுகோய் போர் விமானங்களின் சிறப்பு அம்சமாகும். இந்தியாவிடம் 270-க்கும் அதிகமான சுகோய்-30MKI விமானங்கள் உள்ளன.
இந்நிலையில், ரஷ்யா Su-57E போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க முன்வந்துள்ளது. நவீன போர்க்களத்தில் ஒரு கேம் சேஞ்ஜராக இருக்கும் Su-57E போர் விமானத்தின் மூல மென்பொருள் குறியீட்டை இந்தியாவுக்குத் தரவும் ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியா பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும், ரஃபேலின் மூலக் குறியீட்டைப் பகிர்ந்து கொள்ள பிரான்ஸ் மறுத்துவிட்டது. இதனால் தனது மாறிவரும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப ரஃபேல் போர் விமானங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்தச் சுழலில், ரஷ்யா தனது Su-57E போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க முன்வந்துள்ளது என்றதும், அமெரிக்காவை விடவும் சீனாவும் பாகிஸ்தானும் தான் அதிகம் அச்சமடைந்துள்ளன. பாகிஸ்தானுக்குச் சீனா, J-35 தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கியுள்ளது. அமெரிக்காவும் தனது F-16 போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் Su-57E போர் விமானங்களைக் கொள்முதல் மற்றும் உற்பத்தி செய்வது இந்தியாவுக்கு மிக அவசியமாகும்.
அமெரிக்கா தனது சொந்த ஐந்தாவது தலைமுறை போர் விமானமான F-35A ஐ விற்பனை செய்வதற்குத் தயாராகி வரும் நிலையில், இந்தியாவுக்கு ரஷ்யா நேசக்கரம் நீட்டியிருப்பது மிக முக்கியமான புவிசார் அரசியல் யுக்தியாகும்.