காரியாபட்டி அருகே 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்வி மடை கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் முக்குலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கல்வி மடை கிராமத்தில் இரண்டு மருத்துவ குழுவினர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு கிராமத்தில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது விநியோகிக்கப்பட்ட சுகாதாரமற்ற குடிநீரைப் பருகியதாலும், கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்களை வாங்கி சாப்பிட்டதாலும் உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.