சிவகங்கையில் கனமழையால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்த நிலையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 10வது வார்டு காந்திஜி நகரில் கனமழையால் அவ்வப்போது வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் செல்வது வாடிக்கையாக உள்ளது. . இதனால் கடுமையான துர்நாற்றம் வீசியதோடு தெருவில் கிடந்த குப்பைகளும் தேங்கிய நிலையில் வீட்டுக்குள்ளே பொதுமக்கள் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் மானாமதுரை – தாயமங்கலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் நகராட்சி அதிகாரிகள் சரி செய்து தருவதாக கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.