பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தடையை மீறி கோயில் தேரோட்டத்தை நடத்த முயன்ற பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமையன்று தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் பட்டியலினத்தவர் தெருவின் வழியாக தேர் செல்ல மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தேரோட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வேத மாரியம்மன் கோயில் தேரை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், தடுப்புகளை அகற்றி விட்டு தேரோட்டத்தை நடத்த முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், தேரோட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.