திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பல்லடம் அருகே நாரணாபுரத்தை சேர்ந்த 90 வயதான செல்லம்மாள், மாதப்பூர் அருகே உள்ள 27 ஏக்கர் பூர்வீக சொத்துக்களை உரிய ஆவணங்களுடன் வாரிசு தாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்க எண்ணியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 5 முறை துணை தாசில்தார் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லாதவரை நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் கண்டிப்பு காட்டியதால் மூதாட்டியை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முழு ஆவணங்களும் மூதாதையர் காலத்தில் இருந்து முறையாக இருக்கும் நிலையில் வேறு நபர்களுக்கு ஆவணத்தில் முறைகேடு செய்து நிலத்தை அபகரிக்கத் துணை தாசில்தார் உடந்தையாக முயற்சி செய்வதாகவும், இல்லை என்றால் ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கும்படி கேட்டதாகவும் செல்லம்மாளின் மகன் சண்முகசுந்தரம் குற்றஞ்சாட்டி உள்ளார். இதனிடையே மூதாட்டி செல்லம்மாள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.