வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்ற அந்நாட்டின் இடைக்கால தலைவர் யூனுஸின் அறிவிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய அதிகாரம் பறிக்கப்படும் என்பதாலே திட்டமிட்டுத் தேர்தலை நடத்தக் காலம் தாழ்த்துவதாகவும் யூனுஸ் மீது புகார் எழுந்திருக்கிறது.
வங்கதேசத்தில் வேலை இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களால் கடந்தாண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டம், காலப்போக்கில் அந்நாட்டின் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான மக்கள் இயக்கமாக மாறியது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் ஹசீனா டாக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைய வேண்டிய சூழலும் உருவாகியது. இதனையடுத்து வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பதவியை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஏற்றுக் கொண்டார். வங்கதேசத்தில் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தில் பணியமர்த்தப்பட்ட யூனுஸோ அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என புகார் எழத் தொடங்கியது.
வங்கதேச இடைக்கால அரசு நிர்வாகத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர் -உஸ்-ஜமான் அழைப்பு விடுத்திருந்தார். அவரின் கருத்தை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டின் முக்கிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சியும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாகத் தேர்தல் நடத்தப்படும் என்ற யூனுஸின் அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது யூனுஸின் அறிவிப்பு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மீண்டும் போராட்டத்தில் குதித்திருப்பதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வங்கதேசத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறும் வகையில் வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் யூனுஸ் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யூனுஸுக்கு ஆதரவாக மாணவ தலைவர்களும், இளைஞர்களும் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. யூனுஸின் ராஜினாமா செய்திகள், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என விரும்பும் ராணுவத் தலைவருக்கும், மக்களுக்கும் எதிராக மிகப்பெரிய போராட்டத்தைத் தூண்டுவதற்கான சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது. ஒருவேளை தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டால் யூனுஸின் அதிகாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்பதாலே இதுபோன்ற சூழ்ச்சியில் ஈடுபடுவதாகவும் அவர் மீது புகார் எழுந்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தின் ஒரே பெரிய கட்சியான வங்க தேச தேசிய கட்சி தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. அதனால் தான் மாணவர்களைப் பயன்படுத்தி போராட்டங்களைத் தூண்டி தேர்தலை நடத்த விடாமல் அதிகாரத்தில் நீடித்து இருப்பதற்கான நாடகங்களில் யூனுஸ் இறங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், முக்கியமான முடிவெடுக்கும் செயல்முறைகளிலிருந்து ராணுவத்தை நீக்கியிருக்கும் யூனுஸின் செயல்பாட்டை ராணுவத் தளபதி ஜமான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் யூனுஸுக்கு எதிரான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் லண்டன் சென்றிருந்த யூனுஸுக்கு எதிராக லண்டன் வாழ் வங்கதேசத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதிகாரத்தைத் தக்க வைக்க வேண்டும் என்ற யூனுஸின் பேராசை வங்கதேசத்தில் மீண்டும் ஒரு மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.