சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீது வரும் 21ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2006-2011ம் ஆண்டு செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகையை பொன்முடி உள்ளிட்டோர் வெளிநாடுகளில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பான விசாரணையின்போது சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் தனது வயதை கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு பொன்முடி தற்போது திமுகவின் செயற்குழு உறுப்பினராக இல்லை என்பதால் விசாரணையில் இருந்து ஆஜராக விலக்களிக்க கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராவதில் விலக்களிக்க கோரிய மனு மீது வரும் 21-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி, பிரதான வழக்கை ஜூலை 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.