நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவின் முதல் நிகழ்வான விநாயகர் திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லையப்பர் கோயிலில் ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 8ஆம் தேதி வரை ஆனித்திருவிழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆனித்திருவிழாவின் முதல் நிகழ்வான விநாயகர் திருவிழா கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, கோயில் உள் பிரகாரத்தில் கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
பின்னர், மேள தாளம் முழங்க சின்ன கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை அடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.