அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அகமதாபாத் விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். இந்த விசாரணை A.A.I.B எனப்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பால் வழிநடத்தப்படும் எனவும், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை அமைப்பிற்காக பல துறை நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து முழுமையாக ஆராய்ந்து குழு பரிந்துரைகளை வழங்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் இந்த குழு செயலாற்றும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.