அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற் போது காணலாம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வியாழக் கிழமை 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், புறப்பட்ட 5 நிமிடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இது கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயில் இருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது கடும் மழை மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக ஓடுபாதையை தாண்டி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த 2010-ம் ஆண்டு மே 22-ம் தேதி, 166 பயணிகளுடன் துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது சரியான இடத்தில் நிற்க முடியாமல் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதேபோல, கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி 55 பேருடன் பீகார் மாநிலம் பாட்னாவில் தரையிறங்க முற்பட்ட அலையன்ஸ் ஏர் பிளையிட் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தின் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தரையில் இருந்த 5 பேர் உட்பட 60 பேர் பலியாகினர்.
கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, ஹரியானா மாநிலம் சர்கி தாத்ரி பகுதியில், சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் 763 விமானம் மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் 1907 விமானம் ஆகியவை தொடர்பு கோளாறு மற்றும் உயர அறிவுறுத்தல்களை மீறியதால் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு விமானங்களிலும் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 349 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி, 118 பேருடன் மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம், எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் நுழைந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தால் தீப்பிடித்து எரிந்த விமானத்தில் சிக்கி 55 பேர் இறந்த நிலையில், மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
கடந்த 1990-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, 146 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தரையிறங்க முயன்ற இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A320 விமானம், முன்கூட்டியே தரையிறங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 92 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி, 135 பேருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், தரையிறங்க முற்பட்டபோது போதிய வெளிச்சமின்மையால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இதேபோல, கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 213 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்ப முற்பட்டு இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அரபிக்கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.