கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழைக்கும், நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாளை நீலகிரியில் அதி கனமழைக்கும், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.