மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டுபவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதா உட்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மருத்துவக் கழிவுகளை பொது வெளியில் கொட்டினால் சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டினாலோ விசாரணையின்றி குண்டாஸ் பதியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார்.
இதையடுத்து ஏப்ரல் மாதம் 29-ம் தேதி மசோதா மீதான விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் அனுமதிக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகுக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.