பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் பலத்த காற்றால் விசைப்படகு கடலில் மூழ்கிய நிலையில், அதிலிருந்த மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுகத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு பழுது நீக்கப்பட்ட விசைப்படகு ஒன்று, மண்டபம் வடக்கு துறைமுகத்திற்கு பாம்பன் பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது, வீசிய பலத்த காற்றால், விசைப்படகு தலைகுப்புற கவிழ்ந்து, கடலில் மூழ்க ஆரம்பித்தது. இதனை அடுத்து, விசைப்படகிலிருந்த மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
பழைய ரயில் பாலத்தைக் கடக்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், படகுகள் மூழ்கும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, பழைய ரயில் தூக்கு பாலத்தை நிரந்தரமாகத் திறந்த நிலையில் வைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.