ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மூன்றாம் உலகப் போரை இஸ்ரேல் தொடங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
குகையில் நீண்ட நாட்கள் பசியோடு பதுங்கி இருந்து,தேடிக் கொண்டிருந்த இரையைச் சரியான நேரத்தில் பிடிக்கப் பாய்ந்து எழும் சிங்கத்தைப் போல இஸ்ரேல் ஈரான் மீது பாய்ந்திருக்கிறது. உலகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஈரானின் அணுசக்தி திட்டங்களை முற்றிலுமாக அழிக்க இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் அணுசக்தி அமைப்பின் (AEOI) முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசி, இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தின் தலைவர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி, ஷாஹித் பெஹெஷ்டி பல்கலைக் கழகத்தில் அணுசக்தி ஆராய்ச்சியாளர்களான அப்துல்ஹமீத் மினௌசெர், அஹ்மத் ரெசா சோல்ஃபாகரி, அமிர்ஹோசைன் ஃபெக்கி மற்றும் மொட்டல்லெபிசாதே ஆகிய ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட ஈரானின் எதிரி நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த புரட்சிகர காவல் படைத் தலைவர் ஹொசைன் சலாமி, ஈரான் “உலகப் பேரரசாக மாறும் வேளை வந்துவிட்டது” என்றும், அரசியல் வரைபடத்தில் இருந்து “யூத ஆட்சியை முற்றிலும் நீக்குவதாகவும்” சவால் விட்டிருந்தார்.
இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைவர் ஹொசைன் சலாமி, தலைமைத் தளபதியான முகமது பாகேரி, துணைத் தளபதியான கோலமாலி ரஷீத் உட்படப் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆப்ரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கைக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில்,முக்கிய தளபதிகள் மற்றும் அணுவிஞ்ஞானிகளை இழந்துள்ள ஈரான், போர் தொடுத்த இஸ்ரேலின் அனைத்து நகரங்களைக் குறிவைத்து,100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் செலுத்தி, பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரான் நடத்திய ஒருங்கிணைந்த ஏவுகணைத் தாக்குதலை “Arrow 3” Hypersonic Surface-to-Air Missile System என்னும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் துல்லியமாகத் தடுத்துள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை, நடுவானிலேயே இஸ்ரேல் எப்படி இடைமறித்தது என்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி உள்ளது.
அமெரிக்காவின் Boeing நிறுவன உதவியுடன் Israel Aerospace Industries என்ற இஸ்ரேல் அரசு நிறுவனம் தயாரித்த “Arrow 3”, பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை ஒலி கேட்டதும், பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைய வேண்டும் என்றும், அடுத்த அறிவிப்பு வரும் வரை, பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேற கூடாது என்றும், இஸ்ரேல் குடிமக்களுக்கு இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில், தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் அமைத்துள்ள ‘நடான்ஸ்’ அணு சக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீண்டும் பதப்படுத்தும் மிக முக்கியமான அணு ஆயுதத் தயாரிப்பு மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘நடான்ஸ்’ அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டது குறித்த வீடியோவை, இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன், உலோக யுரேனியத்தை உற்பத்தி செய்யும் ஒரு கட்டிடம் உட்பட, ஆய்வகங்கள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு ஆகியவை அழிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஃபோர்டோ அணு உலைக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், ஃபோர்டோ அணுசக்தி நிலையம் அழிக்கப் பட்டதாக இன்னும் அதிகாரப் பூர்வ தகவல்கள் வரவில்லை. ஈரானின் மற்ற அணுசக்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல் ஃபோர்டோவைத் தாக்கத் தவறவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.
கோம் அருகே ஒரு மலைக்குள் ஆழமாகப் புதைந்து கிடக்கும் ஃபோர்டோ எரிபொருள் செறிவூட்டல் ஆலை, ஈரானின் மிகவும் முக்கிய அணுசக்தி தளமாகும். இந்த அணுசக்தி நிலையம், மேற்கத்திய நாடுகளின் கவலைகளின் மையப் புள்ளியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
யுரேனியத்தை ஆயுத தரத்திற்கு அருகில் செறிவூட்டக்கூடிய திறன் கொண்ட ஆலையாகும். அதி நவீன ஏவுகணைகளால் கூட தொட முடியாத வகையில் ஃபோர்டோ தளம் பாதுகாக்கப் படுகிறது. 2015 ஆம் ஆண்டு, கூட்டு விரிவான செயல் திட்டத்தின் (JCPOA) கீழ், ஃபோர்டோவை ஒரு ஆராய்ச்சி மையமாக ஈரான் பயன்படுத்தத் தொடங்கியது. 2023 மார்ச் மாதத்தில், 83.7 சதவீத தூய்மைக்கு யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பது கண்டறியப் பட்டது. 90 சதவீத தூய்மையான யுரேனியத்தின் அடுத்த கட்டம் ஆணு ஆயுதமே.
ஃபோர்டோ இருக்கும் வரை, ஈரான் அணுஆயுதங்களை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஈரான் அணுசக்தி கொண்ட நாடாகும் வாய்ப்புள்ளது. அது உலகத்துக்கே ஆபத்தாக முடியும் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணுசக்தித் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை ஆப்ரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.