இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் குழு, வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2027-ம் ஆண்டு, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ ‘ஆக்ஸியம் 4’ என்ற திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
அந்த திட்டத்தின்படி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்த விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, போலாந்து, ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த 4 வீரர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விண்கலம் புறப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், விமானியாகச் செயல்படவுள்ள சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரும் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் புறப்படும் விண்கலம் 28 மணி நேரப் பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடையும் எனவும், குழுவினர் 14 நாட்கள் அங்குத் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.