கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தை எந்தவித பிழையுமின்றி திருக்குறள்களை ஒப்புவித்து அசத்தியுள்ளார். அசாத்திய திறமையுள்ள குழந்தை குறித்தும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள் குறித்தும் இந்த செய்தித் தொப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் கயலின் தனித்துவமிக்க திறமை தான் இது. திருக்குறள் மீது தாய், தந்தைக்கு இருந்த பற்று தான் ஒன்றாம் வகுப்பு பயிலும் போதே இத்தகைய அபார சக்தியைக் குழந்தைக்கு வழங்கியிருக்கிறது
அபார நினைவாற்றலைப் பெற்றிருக்கும் கயல், தனது மழலைக் குரலில் 60க்கும் மேற்பட்ட திருக்குறள்களைச் சிறு அளவில் கூட பிழையின்றி துல்லியமாக ஒப்புவித்து அசத்தியுள்ளார். குழந்தை கயலின் தனித்துவமிக்க திறமை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது.
கயலின் சித்திக்குத் திருக்குறளின் மீது இருந்த ஆர்வத்தால் பல பரிசுகளை வென்றதாகவும், அவர் பரிசாகப் பெற்ற திருக்குறள் புத்தகத்தைப் பயன்படுத்தியே தன்னுடைய குழந்தைக்கும் சொல்லிக் கொடுத்ததாகக் கயலின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்
கயலின் இத்தகைய அபூர்வ நினைவாற்றலுக்குப் பின்னர் அவரின் தாய், தந்தை, ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உறுதுணையும் இருந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒன்றாம் வகுப்பு பயிலும் போதே வியக்கத்தக்கச் சாதனைகளைப் புரிந்திருக்கும் கயல் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.