ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தொடங்கியுள்ள தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக உள்ளது. பதிலடியாக இஸ்ரேலின் அனைத்து நகரங்களையும் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் மழை பொழிந்து வருகிறது ஈரான். அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை விட சிறிய நாடு இஸ்ரேல். ஆனால், இஸ்ரேலை விடவும் பல மடங்கு பெரிய நாடு ஈரான். மக்கள் தொகை அடிப்படையிலும் இஸ்ரேலை விட ஈரான் பெரிய நாடாகும். இஸ்ரேலின் மக்கள் தொகை ஒரு கோடியாகும். குறிப்பாக இஸ்ரேலிடம் 1.7 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். ஆனால், ஈரானிடம் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இது இஸ்ரேலை விட ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஈரானின் ராணுவ பட்ஜெட் சுமார் 62,000 கோடி ரூபாய் ஆகும். . இஸ்ரேலின் ராணுவப் பட்ஜெட் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது ஈரானை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல், தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் ஈரானைக் காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது.
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய F-15 ரக அதிநவீன போர் விமானங்கள், எதிரியின் ரேடாரில் தென்படாமல் பறக்கும் உயர் தொழில்நுட்ப F-35 ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ விமானங்கள் மற்றும் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹெலிகாப்டர்கள் என இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக உள்ளன.
ஈரானிடம், F4, F5 மற்றும் F14 வகை போர் விமானங்கள் சுமார் 320 இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை பறக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
புவியியல் அமைப்பில், ஈரானில் இருந்து 2,100 கிலோமீட்டர் தூரத்தில் இஸ்ரேல் அமைந்துள்ளது. அதாவது ஏவுகணைகள் மூலமாகத் தான் இரு நாடுகளும் ஒன்றை ஒன்றைத் தாக்கிக் கொள்ள முடியும்.
அதனால் தான், ஈரானுக்கு ஏவுகணைத் திட்டம் மிக முக்கியமானதாக உள்ளது. 1980ஆம் ஆண்டு முதல் 1988 வரை, ஈராக்குடனான போர் காலத்தில் இருந்தே, தனது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் ஆய்வு மற்றும் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது.
மத்திய கிழக்கில், மிகப்பெரிய மற்றும் மிகவும் வித்தியாசமான ஏவுகணைகளைக் கொண்டுள்ள ஈரானின் ஆயுதக் கிடங்கில் ஏவுகணைகளே அதிகம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் மற்றும் குருஸ் ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன.
2022ஆம் ஆண்டின் கணக்குப்படி ஈரானிடம் 3,000க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பியா வரை தாக்கும் திறன் கொண்டவையாகும். கடந்த15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் தாக்கும் திறனை மேம்படுத்த ஈரான் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது.
ஈரானின் இந்த ஏவுகணைகளே, அமெரிக்காவுக்கும், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை ஈரான் இன்னும் தயாரிக்கவில்லை என்றாலும், நீண்டதூர ஏவுகணை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஈரான் தீவிரம் காட்டி வருகிறது.
நீண்ட தூரம் சென்று தாக்கும் வகையில் ஏராளமான ஏவுகணைகளை ஈரான் வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, 2000 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய Khorramshahr-4 கோர்ராம்ஷஹர் ஏவுகணை, அணுஆயுதம் சுமந்து செல்லக் கூடிய Soumar குரூஸ் ஏவுகணை, 1350 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய Hoveizeh ஏவுகணை, 1650 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய Paveh ஏவுகணை ஆகியவை முக்கியமானவையாகும்.
நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளும் ஈரானிடம் உள்ளன. 1,300 கிலோமீட்டர் செல்லும் ஷஹாப்-3, 1600 கிலோமீட்டர் செல்லும் காதர், 1800 கிலோமீட்டர் வரை செல்லும் எமாட் ஆகிய திரவ எரிபொருள் ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன. திட எரிபொருளில் இயங்கும் மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளுடன் கூடிய அதிநவீன ஏவுகணை கெய்பார் ஷெகான் 1,450 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் படைத்ததாகும். அதேபோல் ஹஜ் காஸ்ஸெம் ஏவுகணை 1,400 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடியதாகும்.
மேலும், 2,000 கிலோமீட்டர் வரை வரம்பைக் கொண்ட திட எரிபொருளில் இயங்கும் செஜ்ஜில் ஏவுகணை ஈரானின் உள்நாட்டுத் திறனில் ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையாகும். 500 முதல் 1000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரிசையில் ஷஹாப்-1, ஷஹாப்-2, ஃபதே-110, ஃபதே-313, ராட்-500, சோல்ஃபாகர், மற்றும் டெஸ்ஃபுல் ஆகிய ஏவுகணைகள் உள்ளன. இந்த ஏவுகணைகளில் பல உயர் துல்லியத்தை நிரூபித்துள்ளன.
ஏவுகணை உற்பத்தியில் வேகம் காட்டி வரும் ஈரான், கடந்த 2017ஆம் ஆண்டு முதல், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி, காஸாவில் ஹமாஸ் என பயங்கரவாத குழுக்களுக்கு ஏவுகணை படைகளைப் கொடுத்து வருகிறது.
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகள் உற்பத்தியை நிறுத்துமாறு ஈரானை வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. 2023ஆம் ஆண்டு அந்த தீர்மானம் காலாவதியானது. அதன் பிறகு ஈரான், அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளை வேகவேகமாக உற்பத்தி செய்யத் தொடங்கியது.
மிகவும் மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு கவசங்களையும், ஊடுருவி செல்லும் திறன் படைத்தவையாகவும் ஈரானின் அதிநவீன ஏவுகணைகள் உள்ளன. ஈரான் ஏவுகணைகளில் கவனம் செலுத்தினால், இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ஏரோ’ அமைப்புகள் இருக்கின்றன.
ஏற்கெனவே, ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தையும் இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ஏரோ’ அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. எனவே இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மிகப் பலமாக உள்ளது.
இந்த பின்னணியில், ஆபரேஷன் ரைஸிங் லயன் மூலமாக, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் விரும்புகிறது. அதற்கு இதுதான் சரியான நேரம் என்று இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
ஈரானின் ஆதரவில் இயங்கி வந்த லெபனான், சிரியா, ஏமன் மற்றும் காசாவில் இயங்கிவந்த ஹிஸ்புல்லா, ஹவுதி, ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் முற்றிலும் தோற்கடிக்கப் பட்டு விட்டன. தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன. பலவீனமான ஈரானை இப்போது அடித்தால் தான் சரியாக இருக்கும் என்று இஸ்ரேல், ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஆசியாவுக்குள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் கனவு வியட்நாம் போருடன் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து ஈரானின் ஆட்சி மாற்றம், ஆசியாவை அமெரிக்கா நெருங்க முடியாத பகுதியாக மாற்றியது. ஆப்கானிஸ்தான் வழியாக ஆதிக்க அரசியலை நிலைநாட்ட முயன்றதும் தோல்வியில் முடிந்தது.
ரஷ்யா, சீனா, இந்தியா, வடகொரியா, வியட்நாம், ஈரான் ஆகிய நாடுகள் ஆசியாவின் எல்லைச்சாமிகளாக நின்று ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுத்து வைத்துள்ளன. அதனால் தான், கடந்த 50 ஆண்டுகளாக ஈரானை வீழ்த்த அமெரிக்கா முயற்சி செய்கிறது. அமெரிக்காவின் குறி முதலில் ஈரானின் ஆட்சி மாற்றம். அப்போது தான் மத்திய ஆசியாவுக்குள் அமெரிக்கா நுழைய முடியும்.
இப்போது, ஆப்ரேசன் ரைசிங் லயன் மூலம், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதன் மூலமாக, தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு நட்பு ஆட்சியை ஈரானில் ஏற்படுத்த முடியும் என்றும் இஸ்ரேல் நம்புகிறது.
இஸ்ரேலின் இந்த செயல்திட்டத்துக்குப் பின் அமெரிக்கா உள்ளதாக ஈரான் உறுதியாக நம்புகிறது. இதனால் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் நிலையில், முழு அளவிலான இஸ்ரேல்-ஈரான் போர் எங்கே போய் முடியுமோ என்று சர்வதேச நாடுகள் கவலையில் உள்ளன.