இஸ்ரேல் – ஈரான் இடையிலான தொடர் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.
ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.
4வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரத்து 481 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 380 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஹைஃபாவின் எண்ணெய் குழாய்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் சேதம் அடைந்தன.
சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மாளிகையைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.. இதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை..
தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் ஈரானின் IRGC எனப்படும் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் உளவுத் துறைத் தலைவர் முகமது கசெமி உயிரிழந்தார். அதேபோல் துணை ஜெனரல் ஹசனும் கொல்லப்பட்டதாக நெதன்யாகு அறிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் மஷாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி எரிபொருள் நிரப்பும் விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே இஸ்ரேலுக்குள் ஊடுருவிய 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தடுத்து அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.