காரைக்கால் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவச் செலவுக்காக மூதாட்டி சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சாம்பலானது.
காரைக்கால் மாவட்டம் விழுதியூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 75 வயதான தனலட்சுமி. 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து தனிமையில் வசித்து வரும் இவர், மருத்துவச் சிகிச்சைக்காக 80 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார்.
இந்நிலையில் அருகில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் மூதாட்டி தனலட்சுமியின் வீடும் எரிந்து சேதம் அடைந்தது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து கருகியது.
மருத்துவச் செலவுக்காக சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த பணம் எரிந்ததைக் கண்டு மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரையும் கலங்க வைத்தது.