சாத்தூர் அருகே அரசுப் பள்ளியில் பயின்று மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே படந்தால் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான யோகேஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வுக்கு விண்ணப்பித்த அவர், தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மாணவி யோகேஸ்வரியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி யோகேஸ்வரி, மும்பை ஐஐடியில் விண்வெளி பொறியியல் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பு மற்றும் முயற்சியினால் தேர்வில் வெற்றி பெற்றதாகவும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், விண்வெளி பொறியியல் துறையில் சாதனை படைத்து தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன் என மாணவி கூறியுள்ளார்.