ஊத்தங்கரை அருகே ஆண்கள் இல்லாத நேரத்தில், பெண்களை வாகனத்தில் பூட்டி வைத்து 6 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொள்ளப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தை ஒட்டி சேலம் – ஜோலார்பேட்டை ரயில்வே இருப்புப் பாதையை தாண்டி மேலும் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், அந்த வீடுகளுக்கு பாதை வேண்டி கடந்த 13ஆம் தேதி கொள்ளப்பட்டி கிராமத்தில் இருந்த 6 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 50 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் இருந்த பொதுவழியை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதற்காக சம்மந்தமே இல்லாமல் 6 வீடுகளை இடித்து அகற்றியதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், மாற்று பாதை அமைக்க பல வழிகள் இருந்தபோதும் அதிகாரிகள் தங்களது வீடுகளை குறிவைத்து இடித்து அகற்றியது குறித்து தமிழக அரசு விசாரனை நடத்த வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.