வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த வைத்திய கவுண்டன் புதூரில் கடந்த 10 ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து தனியார் பள்ளியை நடத்தி வந்துள்ளனர். இந்த பள்ளியில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் அனைத்து பொறுப்புகளையும் சரவணன் என்பவர் நிர்வகிப்பதாகவும், வரவு-செலவு கணக்குகளில் மோசடி செய்ததாகவும் பிற பங்குதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பள்ளியை நடத்தவிடாமல் இடையூறு செய்து வருவதாகவும், 200க்கும் மேற்பட்ட மாணவர்களை வேறு பள்ளிக்கு இடம் மாறுதல் செய்ததாகவும் கூறியுள்ளனர். பள்ளியை சுற்றி வேலி அமைத்து மாணவர்களை வரவிடாமல் தடுத்து வருவதாகவும், இது தொடர்பான புகாரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு தொடர்ந்து பள்ளி செயல்பட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.