வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து மர்மநபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன இளைய நகரம் பகுதியில் பாப்பம்மாள் என்பவர் தனது மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே உள்ள கானாற்றில் மர்மநபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் தூர்வாரப்பட்ட கரையின் பக்கவாட்டுகளில் பள்ளம் தோண்டி மணல் திருடியுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட பாப்பம்மாள் மற்றும் அவரது இளைய மகன் ஜெயக்குமார் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பவம் குறித்து மூத்த மகன் சீனிவாசன் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.
இதனை அறிந்த, மர்மநபர்கள் மருத்துவமனையில் புகுந்து 3 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.