இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அணுசக்தி தளங்களையெல்லாம் அழித்து விட்டு,ஈரானின் புதிய ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் நெதன்யாகுவின் ஆசை நிறைவேறுமா? இஸ்ரேலை இல்லாமல் ஆக்குவோம் என்ற கொமேனியின் சபதம் நிறைவேறுமா? எங்கே செல்கிறது இஸ்ரேல்- ஈரான் போர் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜெருசலேம் வானத்தில் ஆயிரக் கணக்கான ஏவுகணைகள் தீயாய்ப் பறக்கிறது. தீக்கிரையான ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வானமெங்கும் பெரும் புகை சூழ்ந்திருக்கிறது. வெடிச்சத்தத்தை விடவும் அதிகமாக அலறல் சத்தங்கள் இஸ்ரேலில் தெருக்களில் கேட்கின்றன.
ஈரானின் அனைத்து ஏவுகணைத் தளங்கள், ஏவுகணை உற்பத்தித் தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து அழித்துள்ளது. தலைமை இராணுவத் தளபதி உட்பட பல தளபதிகள், முக்கிய அணுவிஞ்ஞானிகள் கொல்லப் பட்டுள்ளனர்.
ஈரானை அணுசக்தி நாடாக மாற விடாமல் தடுப்பதற்காக, இஸ்ரேல் ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற நடவடிக்கையைத் திடீரென தொடங்கியது. பதிலுக்கு ஈரானும் (Operation Harsh Punishment) ஆப்ரேஷன் கடுமையான தண்டனை என்ற பெயரில் தாக்குதலைத் தீவிர படுத்தியுள்ளது.
1980க்குப் பிறகு, முதல்முறையாக, ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 1990ஆம் ஆண்டில் இருந்தே ஈரான் அணுசக்தி திட்டத்தில் முன்னேறிவருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டி வருகிறார்.
ஈரானின் யுரேனியம் கையிருப்பு ஆபத்தான அளவை எட்டியுள்ளது. ஈரான் தற்போது சுமார் 408 கிலோகிராம் யுரேனியத்தை 60 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டியுள்ளது. மாதந்தோறும் 30 கிலோகிராம் வரை செறிவூட்டிவருகிறது. இப்படியே போனால் இன்னும் ஓரிரு மாதங்களில் ஈரான் அணுசக்தி நாடாகும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
ஈரான் அணுசக்தி நாடானால், அது இஸ்ரேலின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாகும் என்பதால், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், ஓமனில், அமெரிக்காவுடன் மறைமுகமாக புதுப்பிக்கப் பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தையை ஈரான் முன்னெடுத்தது.
ட்ரம்ப், ஈரானுடன் புதுப்பிக்கப் பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஆசைப்படுகிறார். ஆனால் நெதன்யாகு ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையை விரும்புகிறார். இந்நிலையில், பேச்சுவார்த்தையை முறிக்கும் வகையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்காவுக்குச் சம்பந்தம் இல்லை என்று ட்ரம்ப் கூறியிருந்தாலும், ஈரான் அதை நம்ப தயாராக இல்லை. இஸ்ரேலுக்கு உதவினால்,அமெரிக்காவையும் பிரிட்டனையும் தாக்குவோம் என்று வெளிப்படையாகவே ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் மலைகள் சூழ்ந்த நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ பகுதியில் சுமார் அரை மைல் ஆழத்தில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள நிலத்தடி அணுசக்தி நிலையங்களை இஸ்ரேலால் தொட முடியவில்லை.
‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ வெற்றி, இந்த அணுசக்தி தளங்களை அழிப்பதில் உள்ளதால், ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவும் களத்தில் இறங்கவேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறார்.
குண்டுவீச்சில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்களை அடையக்கூடிய ‘பதுங்கு குழியை அழிக்கும்’ வெடிமருந்துகளை வழங்குவதன் மூலமாகவோ அல்லது நேரடியாக நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ மீது அமெரிக்கா குண்டு வீச வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்பார்க்கிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்,சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஆகிய நாடுகள் தங்களுடன் நிற்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஆனால், அந்த நாடுகளின் உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தம் வேறுவிதமாக உள்ளது. வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரித்தால்,சொந்த நாட்டில் மக்கள் வெறுப்புக்கு ஆளாக நேரும் என்று அந்த நாடுகள் அஞ்சுகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட இந்த நாடுகளின் ஆதரவு இல்லாமல், இஸ்ரேல், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா, ஹமாஸ்,ஹவுதி தீவிரவாத அமைப்புகளை இஸ்ரேல் முற்றிலுமாக அழித்து விட்ட நிலையிலும், சிரியாவில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதால், ஈரானும் பலமிழந்து நிற்கிறது.
ஈரானுக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று,நெதன்யாகுவை பதவி விலக வற்புறுத்தி,அமெரிக்காவுடன் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது. அல்லது போரில் இஸ்ரேலை வீழ்த்திவிட்டு, அணு சக்தி நாடாக உருவாவது. இரண்டில் ஈரானின் உச்சத் தலைவர் எதை தேர்ந்தெடுப்பார் என்று தெரியவில்லை.
இன்னொரு பக்கம், ஈரானின் கோரிக்கையை ஏற்று நெதன்யாகுவை ட்ரம்ப் வெளியேற்றுவாரா அல்லது, ஈரான் அணுசக்தி தளங்களைத் தாக்குவதில் அவருடன் இணைவாரா ? என்பதும் இன்னும் தெரியவில்லை.
எது எப்படியோ ? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆடும் அபாயகரமான சூதாட்டத்தால், மேற்கு ஆசியாவின் எதிர்காலமே ஆபத்தில் உள்ளது.