ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப் பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தையும் தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம், ஈரான் அரசு தொலைக்காட்சி நிலைய கட்டடம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு, பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். கட்டடத்தை ஏவுகணை தாக்கியதை உணர்ந்த அவர், பதறியடித்து ஓடினார். இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கட்டடம் முழுமையாக சேதமடைந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த தாக்குதலின்போது தொலைக்காட்சி நிலைய கட்டடத்தில் ஊழியர்கள் பலர் இருந்தனர்.
இதில், பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், டெஹ்ரானிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கையெழுத்திடக் கூறிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், தான் அதை மீண்டும் மீண்டும் சொல்லி விட்டதாகவும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.