சைப்ரஸ் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கனடா சென்றார்.
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மத்திய கிழக்கு நாடான சைப்ரஸுக்கு புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இருநாட்டு உறவின் அடையாளமாக சைப்ரஸ் நாட்டின் உயரிய ‘GRAND CROSS OF THE ORDER OF MAKARIOS III’ விருதை, அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டோடௌலிட்ஸ் பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி இது 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதை என தெரிவித்தார்.
தொடர்ந்து நிக்கோசியா அருகே துருக்கிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மலைகளை அதிபர் கிறிஸ்டோடௌலிட்ஸ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் கனடா சென்றார். அங்கு கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 18-ம் தேதி குரோஷியா பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா். இதன்மூலம் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமையை மோடி பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.