நெல்லை அருகே குத்தகை நிலத்தை திமுக நிர்வாகி அபகரித்ததாகக் கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
மேல சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த மாரித்துரை என்பவர் நாங்குநேரி ஜீயர் மடத்திற்குச் சொந்தமான பதிமூன்றரை ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் அந்த நிலத்தை திமுக நிர்வாகி ஒருவர் அபகரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தபோது, பிரச்சனையைத் தீர்த்து வைக்கக் காவல் உதவி ஆய்வாளர் 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாரிதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்கச் சென்றனர். அப்போது மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற நிலையில் அங்கிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.