சிறுவன் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்கும்படியும், தேவைப்பட்டால் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அவரிடத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் 10 மணி நேரத்துக்கும் மேலாக விடிய விடிய விசாரணை நடத்தினார். இந்நிலையில் காவல்துறையின் பரிந்துரையின் பேரில் ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.
இதனிடையே தனது கைது உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.