அமெரிக்க வாழ் இந்தியர்களின் 4.36 கோடி ரூபாய் வைப்பு நிதியை மோசடி செய்த வழக்கில், சென்னை தனியார் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் வங்கியில் கடந்த 2022-ம் ஆண்டு, அமெரிக்க வாழ் மருத்துவரும், அவரது மனைவியும் சேர்ந்து 4 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வைப்பு நிதியாக முதலீடு செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தங்கள் வைப்பு நிதி குறித்து அவர்கள் ஆய்வு செய்தபோது, காலம் முடிவதற்கு முன்பே கணக்கு முடிக்கப்பட்டு, அதிலிருந்த பணம் வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாகச் சம்மந்தப்பட்ட வங்கி மீது ரிசர்வ் வங்கியிலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் தம்பதி புகார் அளித்தனர்.
புகாரில் வங்கியின் நிர்வாக இயக்குநரும், கிளை மேலாளரும் இணைந்து தங்கள் பணத்தை மோசடி செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.