நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, பைன் ஃபாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்றிரவு முதல் உதகை, குந்தா, அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தாக்கம் தீவிரமடைந்து கனமழையானது பெய்து வருகிறது.
இந்நிலையில் உதகை படகு இல்லத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.