சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது ஜூலை 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திமுக எம்பி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாகக் குற்றம்சாட்டி, கடந்த 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு வழக்கில் சில ஆவணங்களை வழங்க வேண்டும் என ஆ.ராசா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, ஆ.ராசாவின் வருமான வரி கணக்கை, சாட்சி விசாரணையின் போது சரி பார்த்துக் கொள்ளலாம் என வாதிடப்பட்டது.
இதனை அடுத்து ஆ.ராசாவின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, ஜூலை 23-ஆம் தேதி வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என அறிவித்தார்.
மேலும், அன்றைய தினம் ஆ.ராசா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.