மத்திய கிழக்கில், எதிரெதிர் துருவங்களாக உள்ள இஸ்ரேலும் ஈரானும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இதில், இஸ்ரேலின் 5 ஆம் தலைமுறையைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையில், சக்திவாய்ந்த போர் விமானங்களாகக் கருதப்படும் F -35 ரக போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய முதல்நாடு ஈரான் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
1979-ம் ஆண்டு வரை இஸ்ரேலும் ஈரானும் இருநாடுகளும் நட்பு நாடுகளாகவே இருந்து வந்தன. ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் அமைந்த இஸ்லாமிய அரசு, இஸ்ரேல் என்ற நாடு இருப்பதையே அங்கீகரிக்கவில்லை. எனவே, இஸ்ரேலையும் யூத நாடு உருவாகக் காரணமான அமெரிக்காவையும் எதிர்ப்பதையே அரசின் முக்கிய கொள்கையாக ஈரான் வைத்துள்ளது.
மேலும் லெபனானில் ஹிஸ்புல்லா, காசாவில் ஹமாஸ் மற்றும் ஏமனில் ஹெளதி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வந்தது. இதனாலேயே ஈரானைத் தனது இருப்புக்கான அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்க்கிறது.
2023ம் அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களைப் பிணையக் கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். தொடர்ந்து ஹமாஸ்,ஹிஸ்புல்லா,மற்றும் ஹூதி பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் வேட்டையாடியது.
இந்நிலையில்,கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானின் இராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஈரானும் தீவிரப் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரானில் உள்ள இராணுவ மற்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்க அமெரிக்காவின் தயாரிப்பான F-15, F-16 மற்றும் F-35 அதிநவீன போர் விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது இஸ்ரேல்.
இந்நிலையில், இஸ்ரேலின் இரண்டு F-35 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளன என்றும் இஸ்ரேல் ஏவிய பல ட்ரோன்களும் இடைமறித்து அழிக்கப் பட்டுள்ளன என்றும், இஸ்ரேல் விமானப்படையின் பெண் விமானி ஒருவர் சிறை பிடிக்கப் பட்டுள்ளதாகவும் இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்தப் பட்ட எந்த போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று திட்டவட்டமாக இஸ்ரேல் மறுத்துள்ளது.
இன்றைய உலகில் மிகவும் வலிமையான,எதிரி நாட்டின் ரேடார்கள் ,வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தெரியாமல் மறைந்து சென்று தாக்கும் திறன் கொண்ட விமானங்களில் F-35 முதன்மையானதாகும். இந்த போர் விமானத்தை வானில் தாக்கி அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, அமெரிக்க விமானப்படையின் F-117A (Nighthawk stealth)நைட்ஹாக் ஸ்டெல்த் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.1999-ல் யூகோஸ்லாவியா உள்நாட்டுப் போரின் போது இது நடந்தது.
ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற யூகோஸ்லாவியாவின் வானத்தில் அமெரிக்க விமானப் படையின் முதல் ஸ்டெல்த் போர் விமானம் F-117A (Nighthawk stealth)நைட்ஹாக் ரோந்து சென்றது.
(Belgrade)பெல்கிரேடு அருகே பறந்து கொண்டிருந்தபோது, யூகோஸ்லாவிய இராணுவத்தின் (Lt. Col Zoltán Dani ) லெப்டினன்ட் கர்னல் சோல்டன் டானியின் தலைமையிலான பிரிவு அந்த போர் விமானத்தைக் கண்டறிந்தது.
லெப்டினன்ட் கர்னல் டானி , ஒவ்வொரு முறையும் 20 வினாடிகள் என்று, தனது ரேடார்களை மூன்று முறை இயக்கி போர் விமானத்தின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தினார். உடனடியாக அமெரிக்க ஸ்டெல்த் போர் விமானத்தைக் குறிவைத்து ஏவுகணைகளைச் செலுத்தினார் லெப்டினன்ட் கர்னல் டோர்கி அனிசிக்.(Lt Col Đorđe Aničić,)
பிறகு மீட்கப்பட்ட அமெரிக்க விமானி ( Lt. Col. Zelko )லெப்டினன்ட் கர்னல் ஜெல்கோ, S-125 ஏவுகணைகள் தன்னை நோக்கிப் பாய்ந்து வருவதைக் கண்டதாகவும், முதல் ஏவுகணையில் தப்பிய போதும், இரண்டாவது ஏவுகணை F-117A போர் விமானத்தைத் தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
F-117A போர் விமான சுட்டு வீழ்த்தப்பட்டதை அதே நேரத்தில் போஸ்னியாவானில் பறந்து கொண்டிருந்த நேட்டோ படையின் போயிங் KC-135 Stratotanker ஸ்ட்ராடோடேங்கராலும் உறுதி செய்துள்ளது.
இது நடந்து ஒரு மாதத்துக்குள் இன்னொரு F-117A போர் விமானம் யூகோஸ்லாவிய வான் பாதுகாப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டது. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டிலிருந்து F-117A ரக விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றது.
இப்போது,அமெரிக்காவின் 5ம் தலைமுறை F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால், அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.