திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே 29 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல பாதுகாப்பு வாகனம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செம்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 29 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊழியரே நாடகமாடி பணம் கொள்ளையடித்ததை கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து, சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், நாடகமாடி பணத்தை கொள்ளையடித்த நாக அர்ஜுனை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல பாதுகாப்பு வாகனம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.
உரிய பாதுகாப்பு இல்லாமல், இரவு நேரத்தில் கொள்ளையனை அழைத்து சென்றது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.