நடிகர் ஆர்யாவின் உறவினருக்கு தொடர்புடைய உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
துபாயை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சீஷெல் உணவகம், இந்தியாவில் டெல்லி, கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. சீஷெல் உணவகத்தை நடிகர் ஆர்யா வாங்கி நடத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த மூசா மற்றும் உறவினரான அப்துல் சலாம் ஆகியோருக்கு உணவகத்தை விற்றுள்ளார்.
அவர்கள் இருவரும் சீஷெல் உணவகத்தை நடத்தி வந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சீஷெல் உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர், கிரீம் சாலை, வேளச்சேரி, துரைப்பாக்கம், ஓஎம்ஆர் மற்றும் கேரளாவில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ஆர்யாவின் உறவினரான அப்துல் சலாம் வீட்டிலும், தரமணியில் உள்ள குன்ஹி மூசா வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.