ஈரானில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் 110 பேர் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், ஈரானில் கல்வி பயின்று வந்த மாணவர்களில் 110 பேரை மீட்ட மத்திய அரசு பாதுகாப்பாக டெல்லி அழைத்து வந்தது.
இந்திய தூதரகம் மூலம் அர்மேனியன் எல்லைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அப்போது பேசிய மாணவர்கள் தங்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய மாணவர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.