கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் அறிவித்துள்ளார்.
அவினாசி சாலையில் அமைந்துள்ள பிளாக் மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்த விநாயகர், ராகு, கேது உள்ளிட்ட சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரளான பொதுமக்கள் கோயிலில் குவிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வருகைதந்த பாஜக மாநில துணைத்தலைவர் ஏபி முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். கோயில் சிலைகளை சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திய அவர், இதனை கண்டித்து நீலம்பூரில் வரும் 20-ஆம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.