சன் டிவி நெட்வொர்க் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அதன் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரது சகோதரர் தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், முரசொலி மாறன் உடல்நலக் குறைவாக இருந்த காலத்தை பயன்படுத்தி பங்குகளை கலாநிதி மாறன் வசப்படுத்திக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சன் டிவி நெட்வொர்க் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், கடந்த 2003ஆம் ஆண்டு 12 லட்சம் பங்குகளை சட்ட விரோதமாக கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாகவும் நோட்டீஸில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பங்கு பரிவர்த்தனை மூலமாக கலாநிதி மாறன் 5 ஆயிரத்து 926 கோடி ரூபாய் பலன் பெற்றுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள தயாநிதி மாறன், முறையற்ற வகையில் வசப்படுத்திய பங்குகளின் மூலம் சன் டைரக்ட், KAL ரேடியோ, KAL ஏர்வேஸ், SRH அணியில் கலாநிதி முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி மட்டுமல்லாமல் அவரது மனைவி காவேரி மாறன் உட்பட 7 பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்தாண்டு அக்டோபரில் கலாநிதி மாறனுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
கலாநிதி, அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், சன் டிவி பங்குகளை கையாளும் முறையை 2003ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு மீட்டெடுக்கவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.