அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் நல்ல பராமரிப்பில் இருந்ததாகவும், விமானம் புறப்படுவதற்கு முன்பு வரை எந்த கோளாறும் இல்லை எனவும், அந்நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ள அவர், விபத்துக்குள்ளான விமானத்தின் வலது பக்க என்ஜின் கடந்த மார்ச் மாதம்தான் மாற்றப்பட்டதாக கூறினார்.
2023ம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டதாகவும், அடுத்த சோதனை இந்தாண்டு இறுதியில் நடைபெற இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இரண்டு என்ஜின்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வந்ததாக கூறிய அவர், விமானம் புறப்படுவதற்கு முன்பு வரை எந்த பிரச்னையும் தென்படவில்லை என தெரிவித்தார்.
அகமதாபாத் விபத்துக்கு பின்னர் தங்களிடம் உள்ள 33 போயிங்-787 வகை விமானங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 26 விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா சிஇஓ கூறினார்.