ராமநாதபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வணிக வளாகம் போல் காட்சியளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்குப் பேருந்துகள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலும் கடைகள் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 4 ஏக்கர் பரப்பளவில் 92 கடைகள் கட்டப்படும் நிலையில், 35 பேருந்துகளை மட்டுமே நிறுத்தக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது பேருந்து நிலையமா அல்லது வணிக வளாகமா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், நகராட்சி நிர்வாகமும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் கடைகள் கட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.