நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், கோவில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பாகக் கடந்தாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
கோவில் நிலத்தில் அன்னதான கூடம் கட்ட முடியுமே தவிர, வணிக வளாகம் கட்ட முடியாது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து மனுவுக்குப் பதிலளிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். மேலும், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.