குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை பிரம்மாண்டமான முறையில் யாகசாலை வேள்விகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.
இந்த குடமுழுக்கு விழாவிற்குப் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோயிலின் விமான தளம், யாகசாலை மண்டபம், பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்லும் வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், கார் வாகன நிறுத்துமிடம் வசதிகள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் குறித்துக் கேட்டறிந்தனர். பின்னர் கோயில் நிர்வாகத்தினருடன், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.