11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். பின்னர் அவர் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உட்பட ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.
முன்னதாக பேசிய ராஜ்நாத் சிங், ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை எனவும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதே போல குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பல்வேறு வகையான யோகா ஆசனங்களைச் செய்து அசத்தினார். இந்த யோகா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதில்
உலகெங்கிலும் உள்ள தூதரகப் பணிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு யோகாவில் பங்கேற்றனர்.
இதே போல டெல்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். முன்னதாக பேசிய அவர், 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும், மக்கள் யோகாவைப் பற்றி அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என கூறினார். உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா எவ்வாறு உதவியுள்ளது என்பதையும் நாம் கண்டுள்ளோம் எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
இதே போல உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் உடல்ரீதியாக ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே நமது விருப்பங்கள் நிறைவேறும் எனவும், அதற்கு யோகா மிகவும் அவசியம் எனவும் கூறினார்.
ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் யோகா குரு பாபா ராம்தேவ்வும் பங்கேற்று மேடையில் அனைவர் முன்னிலையிலும் யோகாசனங்களைச் செய்தார்.