இந்திய ராணுவத்தில் யோகா பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டதால் முப்படை வீரர்களுக்குப் பல மாற்றங்கள் கிடைத்துள்ளதாகத் தென் இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
11 வது உலக யோகா தினத்தை ஒட்டி சென்னை அடையாறில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் தென்னிந்தியப் பகுதிகளுக்கான ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராணுவ தளபதி, முப்படைகளுக்கும் யோகா என்பது கட்டாயமான ஒன்று எனவும் யோகா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதேபோல் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா போர் கப்பலிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று யோகா செய்து அசத்தினர்.