ஈரானின் 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பி-2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்களின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம்.
இந்த பி-2 பாம்பர் விமானங்கள் நார்த்ரோப் பி-2 ஸ்பிரிட் எனவும் அழைக்கப்படுகின்றன. நார்த் ரோப் என்ற அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானப் படை நிறுவனம் இந்த விமானத்தை தயாரிக்கிறது.
1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானங்கள் உலகின் மிகவும் வலிமையான குண்டுவீச்சு விமானங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்த விமானங்கள் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி நாட்டின் ரேடார்களில், இந்த விமானங்கள் ஒரு பறவையை போலவே தென்படும் என கூறப்படுகிறது.
இந்த வகையான பி- 2 பாம்பர் விமானங்கள் தொடர்ச்சியாக 40 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 11 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடுவானிலும் இந்த விமானத்தில் எரிபொருள் நிரப்ப முடியும். அவ்வாறு நடுவானில் நிரப்பப்படும் எரிபொருளை கொண்டு 19 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இந்த விமானங்களால் பறக்கு முடியும். இந்த விமானங்கள் மூலம் 13 ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டுகளையும் சுமந்து சென்று எதிரி நாடுகளை தாக்க முடியும்.
2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பி -2 பாம்பர் விமானங்கள் மூலமே அமெரிக்கா பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.