இந்து முன்னணி சார்பில் மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் அறுபடை வீடுகளின் மாதிரிகளில் வழிபாடு நடத்தினர். மாநாட்டின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் குவிந்த முருக பக்தர்கள் அரோகரா முழக்கத்தால் மாநாட்டுத் திடல் அதிர்ந்தது. பக்தர்களின் கூட்டத்தால் சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய மக்கள் வெள்ளமாக மாநாட்டுத் திடல் காட்சியளித்தது.
மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாஜக மூத்த தலைவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநாட்டின் முதல் கலை நிகழ்ச்சியாகப் பம்பை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாட்டில் சிறுவன் சூரிய நாராயணன் தனது காந்தர்வ குரலால் முருகன் பாடலை பாடியதைப் பக்தர்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர்.
தொடர்ந்து மாநாட்டு மேடையில், சிரவ ஆதின கர்த்தா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உரையாற்றினார். அவருக்குத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாகத்தன்று பூஜை செய்யப்பட்ட வேல் வழங்கப்பட்டது.
பின்னர் சிவன், பார்வதி வேடமிட்டு கலைஞர்கள் நடனமாடியதைப் பக்தர்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். மேலும் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளும் களைக் கட்டின.