திருச்சுழி அருகே நிதி அமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக விவசாயி குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு, வளையப்பட்டி கிராமத்திலிருந்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
அதேபோல, ராமர் குடும்பத்தின் பட்டா நிலத்தில் விளைநிலங்களுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதையை பொது வழியாக வளையபட்டி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அனைவரும் ஒற்றுமையாக இருந்த நேரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ராமர் வீட்டிற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பைத் துண்டித்து சிலர் குடிநீரை நிறுத்தி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ராமர், பட்டா நிலத்தின் வழியாகச் செல்லும் பாதையை அடைத்துள்ளார். இந்நிலையில், பட்டா நிலத்தின் வழியாகச் செல்லும் பாதையை பொதுப் பயன்பாட்டிற்கு விடுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு உதவியாளர் பாலகுரு தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக ராமர் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆட்கள் இல்லாத நேரத்தில் தங்களை வந்து மிரட்டுவதாகவும் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இந்த பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியர்தான் தீர்வு காண வேண்டும் என ராமர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.